தேன் என நினைத்து விஷத்தை குடித்த வியாபாரி சாவு


தேன் என நினைத்து விஷத்தை குடித்த வியாபாரி சாவு
x

பள்ளிப்பட்டு அருகே தேன் என நினைத்து விஷத்தை குடித்து வியாபாரி பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 65). இவர் அந்த கிராமத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன், மகள் இருக்கும் நிலையில் 2 பேருக்கும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனியாக வசித்து வந்த முனுசாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் வீட்டில் இருந்தபோது மது குடித்ததில் இவருக்கு வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டது.

இதனால் தேன் குடித்தால் வயிற்றுக்கு நல்லது என்று நினைத்து இவர் வீட்டில் கத்தரி செடிக்கு அடிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து அதை தேன் என நினைத்து குடித்துவிட்டார். இதனால் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக கோனாட்டம் பேட்டையில் உள்ள பள்ளிப்பட்டு தாலுகா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவரை மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முனுசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள கண்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்திபன் (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சூரவாரிகண்டிகை கிராமத்தில் உள்ள ஒரு பஞ்சர் கடையில் பார்திபன் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இவர் வீட்டில் தனியே இருக்கும்போது விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கவலைக்கிடமான நிலையில் உறவினர்கள்பார்தி பனை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் பார்திபனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story