சென்னை விமான நிலையத்தில் புதிய பன்னாட்டு முனையம் செயல்பாட்டுக்கு வந்தது


சென்னை விமான நிலையத்தில் புதிய பன்னாட்டு முனையம் செயல்பாட்டுக்கு வந்தது
x
தினத்தந்தி 25 April 2023 10:00 PM GMT (Updated: 25 April 2023 10:00 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த புதிய அண்ணா பன்னாட்டு முனையம் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. டாக்காவில் இருந்து வந்த முதல் விமானத்துக்கு தண்ணீரை பீய்ச்சியடித்து ‘வாட்டர் சல்யூட்’ கொடுத்து விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.

சென்னை

ஒருங்கிணைந்த புதிய விமானம் முனையம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் ஒருங்கிணைந்த புதிய விமானம் முனையம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை கடந்த 8-ந் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத நவீன முனையமாக புதிய அண்ணா பன்னாட்டு முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய, தமிழ்நாட்டு கலாச்சாரம், புரதான நினைவுச் சின்னங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள் போன்ற ஓவியங்கள் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகள் கையாளும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த முனையத்தில் அதிநவீன புதிய தொழில்நுட்பத்துடன், பயணிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இந்த புதிய முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு சோதனைக்காக 100 கவுண்டர்கள், குடியுரிமை சோதனைக்காக 108 கவுண்டர்கள், பயணிகள் உடமைகள் வரும் 6 கண்வயர் பெல்ட்கள், 17 அதிநவீன லிப்ட்டுகள், 17 எஸ்க்லெட்டர்கள், 6 வாக்கலேட்டர்கள், பயணிகள் உடைமைகளை பரிசோதனை செய்ய 3 அதிநவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் விமான நிலைய ஓடுபாதை, விமானம் நிறுத்தும் இடம், டாக்சிவே போன்றவைகளும் புதுப்பிக்கப்பட்டு, நவீனப்படுத்தப்பட்டு உள்ளன. விமானங்கள் புறப்படுவதற்கு முன் ஓடுபாதையில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

முதல் விமானம் தரையிறக்கம்

இந்த புதிய ஒருங்கிணைந்த அண்ணா பன்னாட்டு முனையத்தில் செயல்பாடு நேற்று தொடங்கியது. முதல் விமானமாக பகல் 12.55 மணிக்கு வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து பங்களா ஏர்லைன்ஸ் விமானம் புதிய முனையத்தில் தரை இறங்கியது. விமானத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் 2 பக்கமும் தீயனைப்பு வாகனங்கள் நின்று தண்ணீரை பீய்ச்சி 'வாட்டர் சல்யூட்' கொடுத்து வரவேற்றனர். இதில் வந்த 192 பயணிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் மலர் கொடுத்து வரவேற்றனர். அதே விமானம் பிற்பகல் 1:55 மணிக்கு புதிய முனையத்தில் இருந்து 189 பயணிகளுடன் டாக்காவுக்கு புறப்பட்டு சென்றது.

சோதனை ஓட்டம்

மேலும் சில விமானங்களும் சோதனை அடிப்படையில் இந்த புதிய முனையத்தில் இயக்கப்படும். இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெறும் நிலையில் வருகின்ற மே மாதத்தில் இருந்து இந்த புதிய முனையத்தில் பெரிய ரக மற்றும் நடுத்தர ரக விமானங்களும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானத்தில் டாக்கா செல்ல வந்த பயணி அசோக்குமார் கூறுகையில், 'பிரமாண்டமாக தயாராகி உள்ள இந்த புதிய அண்ணா பன்னாட்டு முனையத்தில் முதல் விமானத்தில் பயணம் செய்வது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.


Next Story