மோட்டார் சைக்கிளில் வரும்போது சாலையோர முட்புதரில் விழுந்து அணுமின் நிலைய ஊழியர் சாவு


மோட்டார் சைக்கிளில் வரும்போது சாலையோர முட்புதரில் விழுந்து அணுமின் நிலைய ஊழியர் சாவு
x

மாமல்லபுரம் அருகே அதிவேகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வரும் போது சாலையோர முட்புதரில் விழுந்து இறந்த அணுமின் நிலைய ஒப்பந்த பணியாளரின் உடல் செல்போன் சிக்னல் உதவியுடன் 3 நாட்களுக்கு பிறகு முட்புதரில் இருந்து போலீசார் மீட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மடையத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தனுசு (வயது 62), இவர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக புணிபுரிந்து வந்தார். கடந்த 14-ந்தேதி கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

அவரது குடும்பத்தினர் அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் தனுசை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் காணாமல் போனது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரது செல்போன் சிக்னல் எங்கு காட்டுகிறது என ஆராய்ந்தபோது, அது பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள பையனூர் பகுதியை காட்டியது. பிறகு அவர் காணாமல் போன வழக்கு மாமல்லபுரம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் பையனூரில் சாலையோரம் உள்ள முட்புதர்களில் நேற்று தேடினர்.

இந்த நிலையில் பையனூரில் தனியார் கல்லூரி அருகில் உள்ள சாலையோர 4 அடி பள்ளமுள்ள முட்புதரில் அழுகிய நிலையில் மோட்டார் சைக்கிளுடன் தனுசின் உடல் கண்டு எடுக்கப்பட்டது. பிறகு மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 14-ந்தேதி கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் இரவு 8 மணி அளவில் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தபோது, அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்ததால் நிலைதடுமாறி பையனூரில் உள்ள சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து தலையில் பலத்த அடிபட்டு தனுசு உயிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story