சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம் வகுக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம் வகுக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளை தொடர்ந்தனர்.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பான வழக்குகள் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, சீமைக்கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக அரசு தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த அறிக்கைகளை படித்து பார்த்த நீதிபதிகள், மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற டெண்டர் கோரலாம். இதுதொடர்பாக அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் என்று யோசனை தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள், "சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, தமிழ்நாடு அரசு கொள்கைகளை வகுத்து 2 ஆண்டுகளாகியும், எந்த முன்னேற்றமும் இல்லை. சுற்றுச்சூழலை பாதுகாப்பது மாநில அரசின் கடமை ஆகும். ஆனால், சீமைக் கருவேல மரங்கள் இல்லாத கிராமமே இல்லை என்ற நிலைதான் நீடிக்கிறது. அதனால், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை செயலர்கள் அடங்கிய உயர் மட்டக்குழுக் கூட்டத்தைக் கூட்டி திட்டம் வகுக்க வேண்டும். இந்த வழக்குகளை வருகிற ஜனவரி 8-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்' என்று உத்தரவிட்டனர்.


Next Story