சென்னை கோடம்பாக்கத்தில் மனைவியின் நினைவு நாளில் ரவுடி தீக்குளித்து தற்கொலை


சென்னை கோடம்பாக்கத்தில் மனைவியின் நினைவு நாளில் ரவுடி தீக்குளித்து தற்கொலை
x

மனைவியின் நினைவு நாளில் ரவுடி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னை கோடம்பாக்கம், வரதராஜப்பேட்டை பகுதியில் உள்ள ராஜா புராணிகர் தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 34). இவர், சூளைமேடு சுற்றுவட்டார பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் இவர், நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது, உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பிரசாந்த் உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கோடம்பாக்கம் போலீசார், படுகாயம் அடைந்த பிரசாந்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடலில் 62 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த பிரசாந்த், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிரசாந்தின் மனைவி குளோரி கடந்த ஆண்டு இதே நாளில் குடும்ப பிரச்சினையால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த சோகத்தில் இருந்து வந்த பிரசாந்த், மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளிலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பிரசாந்துக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story