மாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து காவலாளி சாவு


மாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து காவலாளி சாவு
x

மாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்து காவலாளி பலியானார்.

சென்னை

சென்னை மாதவரம்-மணலி 200 அடி சாலையில் மாதவரம் ரவுண்டானா அருகே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலை ஓரம் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இந்த பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் ஆண் பிணம் மிதப்பதாக மாதவரம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

உடனடியாக இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மழைநீர் கால்வாயில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர், பள்ளத்தில் விழுந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என தெரிகிறது.

மேலும் விசாரணையில் பிணமாக மிதந்தவர் மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த துரை(வயது 48) என்பதும், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்ததும், அவர் பணி முடிந்து வீட்டுக்கு நடந்து செல்லும்போது நிலைதடுமாறி மழைநீர் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து பலியானதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான துரைக்கு துர்கா என்ற மனைவியும், தீபிகா என்ற மகளும் உள்ளனர்.


Next Story