கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு


கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 30 Jan 2023 7:30 PM GMT (Updated: 30 Jan 2023 7:30 PM GMT)
தர்மபுரி

காரிமங்கலம்:-

காரிமங்கலம் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். 4 மணி நேரம் போராடி உடல் மீட்கப்பட்டது.

கிணற்றில் மூழ்கி சாவு

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அடிலம் ஊராட்சி அல்ராஜ்கொட்டாய் பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் முனிவேல் (வயது 22), இவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவரும், அவருடைய உறவினர் பழனிசாமி (30) என்பவரும் அந்த பகுதியில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்றனர்.

அங்கு முனிவேல் திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார், பாலக்கோடு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். முனிவேல் உடலை மீட்க முயன்றனர்.

உடல் மீட்பு

கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் 3 ராட்சத மோட்டார்கள் மூலம் அவர்கள் முனிவேல் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது, மோட்டார்கள் மூலம் கிணற்று தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு முனிவேல் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முனிவேல் இறந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.


Related Tags :
Next Story