பள்ளிப்பட்டு அருகே மது அருந்திவிட்டு குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி


பள்ளிப்பட்டு அருகே மது அருந்திவிட்டு குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 11 Aug 2023 11:56 AM GMT (Updated: 11 Aug 2023 1:07 PM GMT)

பள்ளிப்பட்டு அருகே மது அருந்திவிட்டு கிணற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார்.

திருவள்ளூர்

வாலிபர்

பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆதிவராகபுரம் காலனியை சேர்ந்தவர் சிவா (வயது 26). செங்கல் சூலையில் கூலி வேலை செய்து வந்தார். இவரது நண்பர்கள் கோண சமுத்திரம் காலனியை சேர்ந்த மோகன் (29) ஆதிவராகபுரம் காலனியை சேர்ந்த முருகன் (22), அஜித் (29). அந்த பகுதியில் உள்ள விவசாய நிலம் அருகே நேற்று முன்தினம் சிவா தனது நண்பர்கள் மோகன், முருகன், அஜித் ஆகியோர் உடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் சிவா விவசாய நிலம் அருகே உள்ள கிணற்றில் குளிக்க போவதாக நண்பர்களிடம் கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் நண்பர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.

கிணற்றில் மூழ்கி பலி

சிவா வீட்டுக்கு வராததை குறித்து அவரது பெற்றோர் நண்பர்களிடம் கேட்டபோது கிணற்றில் குளித்து கொண்டு இருப்பதாக தெரிவித்தனர். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த வீட்டார் கிணற்றுக்கு சென்று பார்த்தனர். அங்கு சிவாவை காணவில்லை. பின்னர் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி பார்த்தபோது சிவா கிணற்றுக்கு அடியில் பிணமாக கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து சிவாவின் தந்தை வையாபுரி ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story