காதலியை திருமணம் செய்து வைக்கக்கோரி உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்


காதலியை திருமணம் செய்து வைக்கக்கோரி உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
x

தனது காதலியை திருமணம் செய்து வைக்கக்கோரி உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் அந்த பகுதியில் 2½ மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

சென்னை

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் மீனாட்சி அம்மன் நகர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் கிஷோர் (வயது 19). பெயிண்டரான இவர், அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவியை 2 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

தன்னை திருமணம் செய்யும்படி தனது காதலியிடம் கி்ஷோர் கூறியதாகவும், அதற்கு அந்த பெண் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிஷோர், திடீரென நேற்று காலை 8 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள சுமார் 50 அடி உயரம் கொண்ட உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி, தனது காதலியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மின் வாரியத்துக்கும் தகவல் தெரிவித்து அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர்,

மேலும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் சென்ற போலீசார், கிஷோரை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அவர் மறுத்ததால் அவரது பெற்றோர் மற்றும் நண்பர்களை அழைத்து வந்து சுமார் 2 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் கிஷோர் செவி சாய்க்கவில்லை.

இதையடுத்து அவரது காதலியை நேரடியாக அழைத்து வந்து திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினர். அதை ஏற்று கிஷோர் உயர்மின் அழுத்த கோபுரத்தில் இருந்து பத்திரமாக கீழே இறங்கி வந்தார்.

இதனால் தாம்பரம், குரோம்பேட்டை, தாம்பரம் மெப்ஸ் உள்பட தாம்பரம் பகுதி முழுவதும் சுமார் 2½ மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிஷோரை கைது செய்தனர்.

இதேபோல் நேற்று இரவு 9 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த விஜய் (25) என்பவர் குடிபோதையில் உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையறிந்த மின்வாரிய அதிகாரிகள், அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர்.

உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரிடம் போலீசார் கீழே இறங்கி வரும்படி கூறி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1½ மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் கீழே இறங்காததால் தீயணைப்பு வீரர்கள், உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி வாலிபரை பிடிக்க முயன்றனர். அந்த வாலிபர், அவர்களுடன் இறங்குவது போல் கீழே இறங்கி வந்து பின்னர் இருட்டை பயன்படுத்தி அருகில் உள்ள சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனால் தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் சுமார் 1½ மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

ஒரே நாளில் காலை மற்றும் மாலையில் 2 வாலிபர்கள் உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story