குடும்ப தகராறு காரணமாக கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி


குடும்ப தகராறு காரணமாக கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி
x

மணல்மேடு அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

மணல்மேடு,

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவன் (வயது 53). இவரது மனைவி அமுதா (37). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகாதேவனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மகாதேவன் அமுதாவிடம் காசு வாங்கிக் கொண்டு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அவரது மூத்த மகன் ராஜராஜசோழன் (17) தட்டிக்கேட்டுள்ளார். அப்போது மகாதேவன் மதுபாட்டிலால் ராஜராஜசோழனின் வயிற்றில் கிழித்துள்ளார். மேலும், அவரது மனைவியையும் அடிவாளால் வெட்ட முற்பட்டுள்ளார்.

உடனே அமுதா அவரது கையில் இருந்த அரிவாளை பிடுங்கி மகாதேவனை கழுத்தில் வெட்டி உள்ளார். இதில் மகாதேவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அமுதா தன் மகனுடன் மணல்மேடு போலீஸ் நிலையம் சென்று கணவனை கொன்று விட்டதாகக் கூறி சரணடைந்துள்ளார்.

இதையடுத்து, மணல்மேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மகாதேவனின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story