சுற்றுச்சுவரை மிதித்து தள்ளிய காட்டு யானை


சுற்றுச்சுவரை மிதித்து தள்ளிய காட்டு யானை
x
தினத்தந்தி 18 Oct 2023 8:15 PM GMT (Updated: 18 Oct 2023 8:15 PM GMT)

கூடலூருக்குள் நள்ளிரவு காட்டு யானை புகுந்து சுற்றுச் சுவர்களை மிதித்தும், உடைத்தும் தள்ளியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி

கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது தொடர் கதையாகி வருகிறது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நடுக்கூடலூர் ஜே.பி. கார்டன் பகுதியில் தினமும் காட்டு யானை ஊருக்குள் வருகிறது. நேற்றுமுன் தினம் நள்ளிரவு காட்டு யானை வந்தது. பின்னர் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது.

விடியற்காலை 7 மணி வரை அப்பகுதியில் காட்டு யானை முகாமிட்டிருந்தது. இதனால் காலை நேர நடை பயிற்சி உட்பட அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்தனர். பின்னர் காட்டு யானை அங்கிருந்து புறப்பட்டு அருகே உள்ள தனியார் விவசாய நிலத்துக்குள் புகுந்தது. அதன் பின்னரே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர் வந்தனர்.


பின்னர் பொதுமக்கள் அப்பகுதியில் பார்த்தபோது வினோத் குமார் மற்றும் சன்னி தாமஸ் ஆகியோரின் வீட்டு சுற்றுச் சுவர்களை காட்டு யானை மிதித்து தள்ளியது தெரிய வந்தது. இதேபோல் அப்பகுதியில் பயிரிட்டு இருந்த வாழை தென்னை உள்ளிட்ட பயிர்களையும் நாசம் செய்திருந்தது. இது குறித்து வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர் அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

தொடர்ந்து காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ளப்படும் என வனத்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.


Next Story