திருத்தணியில் ரெயில்வே சுரங்கப்பாதை மேலிருந்து தவறி விழுந்த பெண் பலி


திருத்தணியில் ரெயில்வே சுரங்கப்பாதை மேலிருந்து தவறி விழுந்த பெண் பலி
x

திருத்தணியில் ரெயில்வே சுரங்கப்பாதை மேலிருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.

திருவள்ளூர்

பெண் பலி

திருத்தணி- சென்னை பைபாஸ் சாலை செல்லும் வழியில் 30 அடி உயரம் உடைய ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. அதன் மேலிருந்து 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று மதியம் திடீரென கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் அந்த பெண்ணுக்கு தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விசாரணை

இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சுரங்கப்பாதை மேலிருந்து கீழே விழுந்த பெண் திருத்தணி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்பாபு மனைவி விஜயலட்சுமி (வயது 52) என தெரியவந்தது. இவருடைய 2 மகள்கள் திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகின்றனர் என்பது தெரிய வந்தது.

விஜயலட்சுமி சுரங்கப்பாதை வழியாக செல்லும்போது தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்துக்கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story