மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு


மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 30 Sep 2023 6:45 PM GMT (Updated: 30 Sep 2023 6:46 PM GMT)

மொபட்டில் சென்ற பெண்ணிடம் வாலிபர்கள் 5 பவுன் நகையை பறித்து சென்றனர். அப்போது அவர் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

சிவகங்கை

நகை பறிப்பு

சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டியை அடுத்த கூமாச்சிப்பட்டியை சேர்ந்தவர் ராமாயி (வயது 62). சம்பவத்தன்று ராமாயி பாகனேரியில் இருந்து மேல வெள்ளஞ்சிபட்டி கிராமத்திற்கு தன்னுடைய அக்காள் சிவகாமி (65) என்பவருடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். மொபட்டை ராமாாயி ஓட்டி சென்றார். சிவகாமி பின்னால் அமர்ந்திருந்தார்.

அவர்கள் கொட்டாபட்டி மடப்புலி கண்மாய் அருகே செல்லும்பொழுது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் இவர்களை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது அந்த மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் திடீரென சிவகாமியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை கண் இமைக்கும் நேரத்தில் பறித்தார். பின்னர் அந்த வாலிபர்கள் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

காயம்

இந்த சம்பவத்தின் போது சிவகாமி மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மதகுபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story