முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை


முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை
x

நெல்லையில் முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி

ஆடி கிருத்திகை தினம் முருகனுக்கு உகந்த தினமாகும். அன்றைய தினம் விரதமிருந்து முருகனை வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. மாதந்தோறும் வரும் கிருத்திகை தினங்களை விட ஆடி மாதம் கிருத்திகை மகத்துவம் மிக்கது. ஆடி கிருத்தியை முன்னிட்டு முருகன் கோவில்களில் நேற்று பக்தர்கள் குவிந்தனர்.

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவிலில் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. இதில் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும், அடி கிருத்திகை பூஜையும் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாளையங்கோட்டை மேலவாசல் சுப்ரமணிய சுவாமி கோவிலில் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜையும், மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், உச்சிகால பூஜையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். இதேபோல் நெல்லை சாலைகுமாரசாமி கோவில், வண்ணார்பேட்டை குட்டத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், நெல்லையப்பர் கோவிலில் உள்ள ஆறுமுகம் சன்னதி, பாளையங்கோட்டை சிவன் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, வாசுகிரிமலை முருகன் கோவில், பொன்மலை முருகன் கோவில் மற்றும் அனைத்து முருகன் கோவில்களிலும் முருகனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.


Next Story