ஆவின் பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும் - தலைமைச் செயலாளர் தகவல்


ஆவின் பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும் - தலைமைச் செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 5 Dec 2023 5:44 PM GMT (Updated: 6 Dec 2023 9:44 AM GMT)

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் முழு வீச்சில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,

மிக்ஜம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. கனமழை காரணமாக, பல பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மின் தடை படிப்படியாக ஒவ்வொரு பகுதியாகச் சரிசெய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

மிக்ஜம் புயல் சென்னையை கடந்த பிறகு நேற்று இரவு முதல் மழையின் தீவிரம் குறைந்தது. இன்று காலையில் இருந்து வெயிலும் தலை காட்டத்தொடங்கியதால் சென்னை வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் முழு வீச்சில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மிக்ஜம் புயலினால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள பகுதிகளில் நாளையும் இலவசமாக ஆவின் பால் தரப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்களை மீட்பதற்கான பணியில் அதிகளவில் மீனவர்களின் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80 சதவிகித இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் சேவை தொடர்ந்து தடையின்றி இயங்கி வருகிறது. சென்னை முழுவதும் தற்போது 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் 30 % பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இடங்களில் 70 சதவிகித தொலைத்தொடர்பு சேவை சீரமைக்கப்பட்டுள்ளது" என்று சிவ்தாஸ் மீனா தெரிவித்திருக்கிறார்.


Next Story