நாம் தமிழர் கட்சி பிரமுகர் காரில் கடத்தல்


நாம் தமிழர் கட்சி பிரமுகர் காரில் கடத்தல்
x

கிருஷ்ணகிரி அருகே நாம் தமிழர் கட்சி பிரமுகரை காரில் கடத்திய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

நாம் தமிழர் கட்சி பிரமுகர்

கிருஷ்ணகிரி, அவதானப்பட்டி அடுத்த முனியன்கொட்டாயை சேர்ந்தவர் சிவசம்பு (வயது35). நாம் தமிழர் கட்சியில் மாவட்ட வணிகர் பிரிவு பாசறை செயலாளராக உள்ளார். மேலும் இவர் மளிகை பொருட்களை ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்று வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் மோட்டார் சைக்கிளில் மனைவி பிரியாவுடன் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகில் சென்றபோது, பின்னால் காரில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து மடக்கினர். பின்னர் அந்த நபர்கள் சிவசம்புவை கத்தியை காட்டி மிரட்டி காரில் கடத்தி சென்றனர்.

வலைவீச்சு

இதனிடையே சிறிது நேரத்தில் சிவசம்பு தனது மனைவி பிரியாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தான், காலையில் வீட்டுக்கு வந்து விடுவேன் என கூறி விட்டு இணைப்பை துண்டித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா கே.ஆர்.பி. டேம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாம் தமிழர் கட்சி பிரமுகரை காரில் கடத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story