குறைகளை சுட்டிக்காட்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது - டி.டி.வி. தினகரன்


குறைகளை சுட்டிக்காட்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது - டி.டி.வி. தினகரன்
x

கோப்புப்படம் 

ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

கல்வி முறையில் உள்ள குறைகளை சுட்டிகாட்டிய ஆசிரியர் உமா மகேஸ்வரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. உமா மகேஸ்வரி மீதான நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் பணியாற்றுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

தமிழக அரசின் கல்வித்துறையில் நிகழும் குறைகளையும் மாணவர்களுக்கு தேவையான கல்வி முறைகள் குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் எழுதி வரும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் உமா மகேஸ்வரியை அரசுக்கு எதிராக அவதூறு பதிவிட்டதாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த பதினைந்து நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேச முன்வராத தி.மு.க. அரசு, கல்வித்துறையில் நிகழும் குறைகளை சுட்டிக்காட்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.

எனவே, ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பள்ளியில் பணியாற்ற அனுமதிப்பதோடு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு தொடக்கப் புள்ளியான ஆசிரியர்கள் சுட்டிக்காட்டும் குறைகளை நிவர்த்தி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story