பாதாள சாக்கடை திட்டப்பணியின்போது பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டால் நடவடிக்கை - குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் எச்சரிக்கை


பாதாள சாக்கடை திட்டப்பணியின்போது பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டால் நடவடிக்கை - குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் எச்சரிக்கை
x

பாதாள சாக்கடை திட்டப்பணியின்போது பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை உரிய பாதுகாப்போடு மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஸ் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ரூ.241.36 கோடியில் மணலி, சின்னசேக்காடு, காரம்பாக்கம் மற்றும் மணப்பாக்கம் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கிய சாலைகளில் பிரதான குழாய்கள் பதித்தல், எந்திர நுழைவாயில்கள் அமைத்தல் மற்றும் வீட்டு இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சம்பந்தப்பட்ட கள அலுவலர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்து உரிய பாதுகாப்போடு அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா? என்பதனை அறிக்கையாக சமர்ப்பிக்கவேண்டும்.

திடீர் தணிக்கைகள் செய்யும்போது பாதுகாப்பு பணிகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மீது உரிய சட்ட விதிகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மேற்கொண்டுவரும் அனைத்து ஒப்பந்ததாரர்களும், சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை தொய்வின்றி செயல்படுத்தி உரிய கால அளவுக்குள், அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் செயல் இயக்குனர் எஸ்.ராஜகோபால் சுங்காரா, சென்னை குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.


Next Story