புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை


புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை
x

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், மக்கள் நல திட்டங்களுக்கு அதிக நிதி கிடைக்கும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சமஸ்தானம்

தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் புதுக்கோட்டை நகராட்சி வரலாறு 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். நாட்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தனி சமஸ்தானமாக புதுக்கோட்டை விளங்கியது. கடந்த 1912-ம் ஆண்டு அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை நகராட்சி உருவானது. அதில் அப்போது 18 உறுப்பினர்கள் இருந்தனர். தொடக்கத்தில் மூன்றாம் நிலை நகராட்சியாக இருந்தது. பின்னர் நாடு சுதந்திரம் பெற்ற பின் புதுக்கோட்டை சமஸ்தானம் இணைக்கப்பட்டது.

இதில் கடந்த 1949-ல் 2-ம் நிலை நகராட்சியாகவும், 1963-ல் முதல் நிலை நகராட்சியாகவும், கடந்த 1988-ம் ஆண்டு முதல் தேர்வு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

மாநகராட்சியாக தரம் உயர்வு

புதுக்கோட்டை நகராட்சியின் பரப்பளவு 21.95 சதுர கிலோ மீட்டர் ஆகும். இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். புதுக்கோட்டை நகராட்சியில் தற்போது 42 வார்டுகள் உள்ளன. இந்தநிலையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை வடக்கு 2-ம் வீதியை சேர்ந்த அறிவுடையநம்பி:- புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் அதிகப்படியான பரப்பளவு கூடும். புதுக்கோட்டை மக்களுக்கு அதிகப்படியாக திட்டங்கள் கிடைக்கும். மக்கள் நல திட்டங்களுக்கான நிதி அதிகம் கிடைக்கும். மேலும் ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு நிர்வாகம் செம்மைபடுத்தப்படும்.

வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்

புதுக்கோட்டையில் தொழில் செய்து வரும் ஆறுமுகம்- புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்ந்தால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. மேலும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கலாம். புதுக்கோட்டை மட்டும் அல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளும் வளர்ச்சி அடையும். மாநகராட்சி என்றாலே ஒரு தனி சிறப்புதான். அதிலும் சமஸ்தானமாக திகழ்ந்த புதுக்கோட்டை, மாநகராட்சியாக தரம் உயர்வது என்பது அனைவருக்கும் பெருமைதான். அதனால் மாநகராட்சியாக தரம் உயர்வது எப்போது என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சாலை, பாலங்கள்

புதுக்கோட்டையை சேர்ந்த விவசாயி மாணிக்கம்:- புதுக்கோட்டை நகராட்சி தரம் உயர்த்தப்பட்டால் நகர்ப்புற கட்டமைப்பு திட்டமிட்டு வடிவமைக்கப்படும். அனைத்து மக்களின் சமூக பொருளாதார வசதிகள் மேம்பாடு அடையும். வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி, பொருளாதார வசதி, கழிவுநீர் வசதிகள் மற்றும் சாலை மற்றும் பாலங்கள், தெருவிளக்குகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்படும்.

அதிக நிதி கிடைக்கும்

புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த கடந்த 2021-ம் ஆண்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. 9ஏ நத்தம்பண்ணை, 9பி நத்தம்பண்ணை, முள்ளூர், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, திருமலைராயசமுத்திரம், திருக்கட்டளை, தேக்காட்டூர் ஆகிய ஊராட்சி பகுதிகளையும் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி அரசுதான் முடிவெடுக்கும். நகராட்சி எல்லை பகுதி விரிவடையக்கூடிய ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் பதவி காலம் முடிவடைய வேண்டி உள்ளது. பதவி காலம் நிறைவடைந்ததும் அவை நகராட்சியுடன் இணைத்து மாநகராட்சியாக அறிவிக்கப்படலாம். இது வருகிற 2024-ம் ஆண்டில் சாத்தியமாக வாய்ப்புள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் திட்டப்பணிகள் அதிகம் வர வாய்ப்புள்ளது. மேலும் நிதி ஒதுக்கீடுகளும் அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story