9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே பொதுமக்கள் வரவேண்டாம் - போலீசார் அறிவிப்பு


9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே பொதுமக்கள் வரவேண்டாம் - போலீசார் அறிவிப்பு
x

ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுகிறது. அப்போது அதன் அருகே பொதுமக்கள் வரவேண்டாம். ஆடு, மாடுகள் சுற்றி திரியாமல் அதன் உரிமையாளர்கள் பார்த்து கொள்ள வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகை அருகே குமிழி ஊராட்சிக்குட்பட்ட பெரிய ஒத்திவாக்கம் கிராமத்தில் தமிழக அரசின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இயங்குகிறது. இந்த நிலையில் வருகிற 9-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் அகில இந்திய அளவில் துப்பாக்கி சுடும் போட்டி மற்றும் பயிற்சி நடைபெறுகிறது.

அதில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்துகொள்கின்றனர்.

ஆகவே வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே உள்ள வனப்பகுதிக்கு கிராம மக்கள் தங்களது ஆடு, மாடுகளை மேச்சலுக்கு வராமல் பார்த்து கொள்ள வேண்டும், மேலும் பொதுமக்களும், சிறுவர்களும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே உள்ள வனப்பகுதிக்கு வரவேண்டாம். மேலும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு செல்லும் கிராம சாலைகளில் ஆடு, மாடுகள் சுற்றி திரியாமல் மாட்டின் உரிமையாளர்கள் பார்த்து கொள்ள வேண்டும் என்று போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே உள்ள கிராம மக்களுக்கு உள்ளாட்சி அமைப்பு மற்றும் போலீஸ்துறை சார்பில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்படுகிறது.


Next Story