அதிமுக கொடி, சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு


அதிமுக கொடி, சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 6 Oct 2023 11:02 AM GMT (Updated: 6 Oct 2023 11:10 AM GMT)

அதிமுக கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நவம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர், "அதிமுக பொதுச்செயலாளர் என தன்னை ஐகோர்ட்டு, தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளன. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறிவருவதுடன், அதிமுகவின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தி வருகிறார். இதனால் தொண்டர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.

எனவே அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் கடந்த மாதம் 21ம்தேதி நடைபெற்றது.

அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு அக்டோபர் 6-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், வழக்கு விசாரணை இன்று நடைபெற்றபோது, ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என இபிஎஸ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், அதிமுக பொதுக்குழுவில் தன்னை நீக்கிய தீர்மானங்கள் செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதால், அந்த வழக்கை பொறுத்து இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு, இந்த வழக்கை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தது.


Next Story