அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே பெரிய விரிசல் இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே பெரிய விரிசல் இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x

அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே பெரிய விரிசல் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கண்ணியத்தென்றல் என்று அழைக்கப்படும் காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக தான் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. அதிமுக சிறந்த எதிர்க்கட்சி என்பதற்கு உதாரணமாக தனியார் தொலைக்காட்சி ஒன்று கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. கமிசன், கலெக்சன், கரப்சென் இதுதான் திமுக‌. திமுகவின் ஊழல் விவகாரங்களை அதிமுக ஏற்கனவே கவர்னரிடம் கொடுத்துள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தொடர்ச்சியாக சொல்லி வருகிறார். கனவு காண்பது அவர்களின் கடமை. ஆட்சியைப் பிடிப்பதற்காக தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறார்கள். எந்த கட்சியினர் வேண்டுமானாலும் கனவு காணலாம், அது அவர்களின் உரிமை. அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே பெரிய விரிசல் இல்லை" என்று அவர் கூறினார்.


Next Story