அ.தி.மு.க. பிரமுகர் கொலை: பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் 3 பேர் சரண்


அ.தி.மு.க. பிரமுகர் கொலை: பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் 3 பேர் சரண்
x

அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் 3 பேர் சரண் அடைந்தனர்.

கரூர்

கரூர் மாநகராட்சி ராயனூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 49). இவர் அ.தி.மு.க.வில் கரூர் மாநகர 32-வது வார்டு செயலாளராக இருந்து வந்தார். கடந்த 4-ந்தேதி இரவு, தனது மோட்டார் சைக்கிளில் கரூரில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, திருமாநிலையூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது வடிவேலை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டியது. இதில், படுகாயம் அடைந்த வடிவேல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வடிவேல் தனது நண்பர் கரூர் முத்துராஜபுரத்தை சேர்ந்த மகாதேவன் (32) என்பவரிடம் ரூ.5 ஆயிரம் கேட்பதற்காக போன் செய்துள்ளார். ஆனால் மகாதேவன் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வடிவேல் கரூர் வந்து, அப்பகுதியில் டீக்கடை ஒன்றில் நின்று கொண்டிருந்த மகாதேவனிடம், `ஏன் போனை எடுக்கவில்லை' என்று கூறி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மகாதேவன் தனது உறவினர் பொய்கை புதூரை சோ்ந்த பாலா மற்றும் சேகர் ஆகியோருடன் சேர்ந்து திருமாநிலையூர் பகுதியில் மறைந்திருந்து வடிவேலை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் மகாதேவன், பாலா, சேகர் ஆகிய 3 பேரும் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story