நாட்டிலேயே ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான் - எடப்பாடி பழனிசாமி


நாட்டிலேயே ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான் - எடப்பாடி பழனிசாமி
x

மக்கள் விரோத ஆட்சி செய்தால் இலங்கை நிலைமைதான் தமிழகத்தில் நிகழும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பழனி,

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பழனிக்கு வந்தார். பின்னர் வேல் ரவுண்டானா பகுதியில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

முருகப்பெருமான் அருளால் திண்டுக்கல் மக்கள் கூட்டம் வெள்ளம் போல் இங்கு திரண்டு இருக்கிறது. அ.தி.மு.க.வை வீழ்த்தி விடலாம் என்று மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார்.

தி.மு.க.வில் குடும்ப ஆட்சிதான் நடக்கிறது. நாட்டிலேயே ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான். தற்போது நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முதல்-அமைச்சர் ஆகியுள்ளீர்கள். எனவே ஆட்சியில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமே தவிர அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களை பழிவாங்குவதற்கு அல்ல.

இலங்கையில் குடும்ப ஆட்சி நடந்ததால் மக்கள் புரட்சி வெடித்தது. எனவே இலங்கையின் நிலைமை மனதில் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும். மக்கள் விரோத ஆட்சி செய்தால் இலங்கை நிலைமைதான் இங்கு நிகழும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த 14 மாதங்களில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாத இருண்ட கால ஆட்சி. ஆனால் அ.தி.மு.க. தற்போது ஆட்சியில் இல்லாவிட்டால் மக்கள் நலனில் அக்கறை கொண்டு குரல் கொடுத்து வருகிறது.

மக்கள் வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில் சொத்துவரி, மின்கட்டணம் உயர்வு என வாக்களித்த மக்களுக்கு அருமையான பரிசை அளித்துள்ளார். ஸ்டாலின் அரசு வெறும் குழு அரசாங்கமாக உள்ளது. எனவே இந்த தி.மு.க. அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்ப பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story