விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சம்பள பாக்கியை வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும், இந்த திட்டத்தின் நிதியினை மாற்று பணிக்கு பயன்படுத்தக்கூடாது என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பெரியபாளையம் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, விவசாய தொழிலாளர் சங்க வட்ட தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். பின்னர், அனைவரும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று தங்களது கோரிக்கை மனுவை, வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளரிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதைபோல சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய ஞாயிறு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு கடந்த 6 வார காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று அறுமந்தை கூட்டுசாலையில் விவசாய சங்கத்தின் சோழவரம் ஒன்றிய செயலாளர் சரளா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் எல்லையன் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story