பொன்னேரி அருகே மது குடிக்க பணம் கேட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை - அக்காள், மாமா கைது


பொன்னேரி அருகே மது குடிக்க பணம் கேட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை - அக்காள், மாமா கைது
x

பொன்னேரி அருகே மதுகுடிக்க பணம் கேட்ட தகராறில் வாலிபரை அவரது அக்காள் மற்றும் மாமா உருட்டுக் கட்டையால் அடித்து கொலை செய்தனர்.

திருவள்ளூர்

பொன்னேரி அருகே மாபுஸ்கான்பேட்டை அம்பேத்கர் தெருவில் வசிப்பவர் ரவி (வயது 51). இவரது மனைவி தனலட்சுமி (41). இவர்களுடன் தனலட்சுமியின் தம்பி பூபாலன் (31) உடன் வசித்து வந்தார். கூலித்தொழிலாளியான பூபாலனுக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், குடிபழக்கத்திற்கு அடிமையான அவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு தனலட்சுமியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தனலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பூபாலன் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் பூபாலனுடன் ஏற்பட்ட தகராறு முற்றவே ஆத்திரமடைந்த தனலட்சுமி தனது கணவர் ரவியுடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் பூபாலனை சரமாரியாக தாக்கினர்.

இதனால் பலத்த காயமடைந்த நிலையில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து இறந்தார். இதனைத்தொடர்ந்து உறவினர்களிடையே பூபாலன் இயற்கை மரணம் அடைந்து விட்டதாக கூறி இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூபாலன் இறந்தது குறித்து விசாரித்தனர்.

அப்போது மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்த போது தம்பியை, தனலட்சுமி மற்றும் அவரது கணவர் ரவி ஆகியோர் உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கொலையான பூபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அக்காள் தனலட்சுமி மற்றும் மாமா ரவி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story