ஜப்பான் நாட்டு வங்கியில் கடன் பெற்று மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய இணை மந்திரி


ஜப்பான் நாட்டு வங்கியில் கடன் பெற்று மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய இணை மந்திரி
x

ஜப்பான் நாட்டு வங்கியில் கடன் பெற்று மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று மத்திய இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார்.

அலுவல் ஆய்வு கூட்டம்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதார திட்டங்கள் பற்றிய அலுவல் ஆய்வு கூட்டம் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சுகாதாரத்தறை அதிகாரிகளிடம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கிராமப்புற சுகாதார திட்டம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார திட்டங்கள் பற்றி கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களிடம் மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவார் கூறியதாவது:-

தமிழக அரசுக்கு பாராட்டு

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு திட்டத்தில் தாய்-சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது, இதற்காக தமிழக அரசை பாராட்டுகிறேன்.

தமிழகத்தில் காசநோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மொத்தம் 46,988 பேர் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் முதல் கட்டமாக 35,382 பேருக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழித்து கட்டுவதே மத்திய அரசின் இலக்கு.

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தி வருவதற்கு அதிகாரிகளையும், தமிழக சுகாதாரத்துறைக்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதில், நில உரிமையாளர்கள் நிலத்தை ஒப்படைப்பது போன்ற காரணத்தால் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக ஜப்பான் நாட்டு வங்கியில் ரூ.1,900 கோடி கடன் எதிர்ப்பார்த்துள்ளோம். கண்டிப்பாக வரும் பட்ஜெட்டில் மத்திய அரசின் அனுமதி பெற்று ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்படும்.

சீனாவில் பரவிவரும் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் பரவாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் போதிய மருந்துகள், தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. இந்த புதியவகை தொற்றினை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், தேசிய குடும்ப நல குழும இயக்குனர் ஷில்பாபிரபாகர் சதீஷ், இந்திய ஓமியோபதி மருத்துவ இயக்குனர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய காசநோய் ஆராய்ச்சி

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிதாக மருத்துவ ஆவண காப்பகம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவ ஆவண காப்பகத்தை, மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவார் நேற்று இரவு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் ஆவண காப்பகத்தை அவர் பார்வையிட்டார்.

பின்னர் காசநோய் தாக்கம், மேம்பட்ட சேவை மற்றும் ஆராய்ச்சி பணிகள் குறித்த கலந்துரையாடல் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். இதில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பத்மபிரியதர்ஷினி மற்றும் வல்லுனர் குழு அதிகாரிகள் பங்கேற்றனர்.


Next Story