திருத்தணி அருகே நில பிரச்சினையில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை


திருத்தணி அருகே நில பிரச்சினையில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை
x

திருத்தணி அருகே நில பிரச்சினையில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

திருத்தணி அடுத்த கிழவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 43). இவர் அரக்கோணம் இச்சிபுத்தூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே கிராமத்தில் வசிக்கும் உறவினரான சந்திரன் (45) என்பவருக்கும் இடையே விவசாய நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் கடந்த வாரம் பிரச்சினைக்குரிய இடத்தில் சர்வே செய்யும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பாஸ்கர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் விவசாய நிலத்தில் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, உறவினர் சந்திரன் பிரச்சினைக்குறிய இடத்தில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பரித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்திரன் தான் வைத்திருந்த கத்தியால் பாஸ்கரின் நெஞ்சில் பலமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாஸ்கரின் மகன் தனது தாய் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த உறவினர்கள் பாஸ்கரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரக்கோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சந்திரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story