முறைகேடு புகார் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


முறைகேடு புகார் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
x

முறைகேடு புகார் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


சென்னை,

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தமிழக சட்ட சபையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசமி, டிஎன்பிஎஸ்சியில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்று வருவது வருந்தத்தக்கது. முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். குரூப் 4 தேர்வில் முறைகேடு விவகாரம் தேர்வ்ர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குரூப் 4 தேர்வு விவகாரத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது. என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார்.

சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார். 2000 பேர் தேர்ச்சி பெற்றனர் என கூறும் பயிற்சி மையம், பல மாவட்டங்களில் தேர்வு மையங்கள் வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

முறைகேடு புகார் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மனித வள மேலாண்மைத்துறை செயலாளரிடம் சொல்லி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு புகார் வந்ததும் செயலாளரிடம் விசாரிக்க அறிவுறுத்தினேன். டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறையில் சீர்திருத்தங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குரூப்-4 தேர்வில் தட்டச்சர் முதுநிலை அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை மாவட்ட வாரியாக கேட்டுள்ளோம். காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 615 பேர் தேர்ச்சி குறித்து தேர்வு மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. முன்னதாக இது போன்ற தேர்ச்சி உள்ளதா என ஒப்பிட்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேடு குறித்து விரிவான அறிக்கை அளிக்க டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.



Next Story