மது வருவாய் அதிகரித்திருப்பது மாநில அரசுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காது - அன்புமணி ராமதாஸ்


மது வருவாய் அதிகரித்திருப்பது மாநில அரசுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காது - அன்புமணி ராமதாஸ்
x

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மது விலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

2022-23-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் 52.30 சதவீதம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனா பாதிப்புகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீளத்தொடங்கியிருப்பதையே இது காட்டுகிறது. இந்த வளர்ச்சி தொடரவேண்டும்.

அதே நேரத்தில் மது உற்பத்தி மீதான கலால் வரி மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.1,199.23 கோடியிலிருந்து ரூ.2,594.55 கோடியாக 116.30 சதவீதம் அதிகரித்திருக்கிறது. மாநில அரசின் விற்பனை வரி வருவாய் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி (38.30 சதவீதம்) அதிகரித்திருப்பதற்கும் மது வணிகம் அதிகரித்திருப்பது தான் காரணம்.

ஒரு காலாண்டில் தமிழக அரசின் வரி வருவாய் ரூ.11,662.68 கோடி அதிகரித்துள்ள நிலையில், அதில் கிட்டத்தட்ட பாதியளவு வருவாய் உயர்வு மது வணிகம் அதிகரித்திருப்பதன் மூலமாக மட்டுமே கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கவில்லை. மாறாக, வருத்தமும், வேதனையும் மட்டுமே அளிக்கிறது.

ஒரு மாநிலத்தின் மது வருவாய் அதிகரிக்கிறது என்றால், குடும்பங்கள் சீரழிவதும், விபத்து மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும், இளம் கைம்பெண்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகத் தான் பொருள் ஆகும். இது ஒரு மாநில அரசுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காது.

மது இல்லாத மாநிலம் தான் மகிழ்ச்சியான மாநிலம். மது மூலம் கிடைக்கும் வருவாயை வேறு ஆதாரங்கள் மூலம் திரட்ட முடியும். எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மது விலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story