பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்


பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
x

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் பாலாறு பகுதி பாலைவனமாகி விடும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

கர்நாடக மாநிலத்தோடு காவிரி தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சினை, கேரள மாநிலத்தோடு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை என்ற வகையில், தற்போது பாலாற்றில் புதிய தடுப்பணை என்ற பிரச்சினை எழுந்திருக்கிறது என்றால், இதற்கெல்லாம் முக்கியக் காரணம் மக்கள் நலனில் அக்கறையில்லாத தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான்.

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட ஆந்திர அரசு 215 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதோடு, அதற்கான அடிக்கல் நாட்டு விழாவினை ஆந்திர முதல்-மந்திரி நடத்தியிருப்பது 1992 ம் ஆண்டு பன்மாநில நதிநீர் ஒப்பந்தத்தை மீறிய செயல் ஆகும்.

பாலாறு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தாலுகாவில் உற்பத்தி ஆகி, கர்நாடகாவில் சுமார் 35 கிலோ மீட்டர் தூரமும், ஆந்திராவில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரமும் பயணித்து, குப்பம் என்ற பகுதியின் வழியாக தமிழ்நாட்டை வந்தடைந்து, செங்கல்பட்டு அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம் அருகில் கடலில் கலக்கிறது.

தமிழ்நாட்டில் பாலாறு பாய்கின்ற தூரம் சுமார் 140 கிலோ மீட்டர் ஆகும். இதன் காரணமாக வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஜீவாதாரமாக பாலாறு விளங்குகிறது. விவசாயம், குடிநீர் மற்றும் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வசதி ஆகியவை பாலாற்றின் மூலம்தான் அப்பகுதி மக்களுக்கு கிடைக்கிறது.

2006-ம் ஆண்டு துவக்கத்தில், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி எடுத்தபோது, ஆந்திர முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியதோடு, உடனடியாக பொதுப் பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விரிவாக விவாதித்து, இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

ஆனால், இன்று தி.மு.க. ஆட்சியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட 215 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதோடு, அதற்கான அடிக்கல் நாட்டு விழாவினையும் ஆந்திர முதல்-மந்திரி நடத்தியிருப்பது, நதிநீர்ப் பிரச்சினையில் தி.மு.க.விற்குள்ள அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகிறது. அடிக்கல் நாட்டு விழா நடைபெறுவதைக்கூட அறியாமல் பாலாற்றினால் பயன் பெறக்கூடிய வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்களும் இருப்பது பாலாற்றின் மீது அவர்களுக்கு உள்ள அக்கறையின்மையை படம் பிடித்துக் காண்பிக்கிறது.

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் பாலாறு பகுதி பாலைவனமாகி விடும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தமிழக பாலாறு பாலைவனமாவதைத் தடுக்க வேண்டுமென்றால் சாதுரியமான, சாணக்கியத்தனமான, துணிச்சலான அணுகுமுறைகள் தேவை.

பாலாற்றின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி, பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story