அண்ணாநகர் கோபுர பூங்கா இன்று மாலை திறப்பு


அண்ணாநகர் கோபுர பூங்கா இன்று மாலை திறப்பு
x

அண்ணாநகர் கோபுர பூங்கா இன்று மாலை பொதுமக்களின் பயன்பாட்டு திறக்கப்படுகிறது. கோபுரத்தின் மேலே ஏறிச்செல்ல ரூ.10 கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை

கோபுர பூங்கா

சென்னை அண்ணாநகரில் உள்ள கோபுர பூங்கா மிகவும் பழமையான பூங்காக்களில் ஒன்று ஆகும். இந்த பூங்காவில் 135 அடி உயர கோபுரம் உள்ளது. அண்ணாநகரின் முக்கிய அடையாளமாக இந்த கோபுர பூங்கா திகழ்ந்து வந்தது. பூங்காவில் உள்ள கோபுரத்தின் மீது ஏறிச்சென்று பொதுமக்கள் சென்னை மாநகரின் அழகை ரசித்து வந்தனர்.

இந்த நிலையில், காதல் தோல்வி அடைந்த ஒரு சில காதல் ஜோடிகள் இந்த கோபுரத்தின் மேலே ஏறிச்சென்று தற்கொலை செய்த சம்பவங்கள் நிகழ்ந்தது. இதனால், கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்த கோபுரத்தின் மேலே ஏறிச்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

எனவே, பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கோபுரம் மற்றும் பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கோபுரம் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் சீரமைக்கப்பட்டு வந்தது. கோபுரத்தின் பக்கவாட்டு பகுதிகளில் தடுப்பு கம்பிகள் மற்றும் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டது.

மாலை திறப்பு

இந்த நிலையில், சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவு பெற்றுள்ள நிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு இந்த கோபுரம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

சீரமைப்பு பணிகள் 3 நாட்களுக்கு முன்பாக தான் முழுமையாக முடிக்கப்பட்டது. கோபுரத்தின் பக்கவாட்டு பகுதிகள் முழுவதும் பாரம்பரிய ஓவியங்களும், மனதை அமைதிப்படுத்தும் வகையில் பசுமையை சித்தரித்து வண்ணங்கள் தீட்டப்பட்டு உள்ளது.

ரூ.10 கட்டணம்

கடந்த 2006-ம் ஆண்டு கோபுரத்தின் மேலே ஏறிச்சென்று சென்னை மாநகரின் அழகை ரசிக்க ரூ.2 கட்டணமாக வசூல் செய்யப்பட்டது. தற்போது ரூ.10 கட்டணம் நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதாவது ½ மணி நேரத்துக்கு ரூ.10 என்றும், அதைவிட கூடுதல் நேரம் இருந்தால் கட்டணம் இரட்டிப்பாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. கட்டண நிர்ணயம் குறித்த முன்மொழிவு மாநகராட்சியின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் அனுமதி கிடைத்தவுடன் கட்டணம் வசூலிக்கப்படும். அதுவரையில் பொதுமக்களுக்கு இலவசமாகவே பார்வையிட அனுமதி வழங்கப்பட இருக்கிறது.

இன்று மாலை 5 மணிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இந்த கோபுரத்தை திறந்துவைக்க உள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story