கேரளா: இலத்தூரில் தீப்பிடித்த அதே ரெயிலில் மீண்டும் தீ விபத்து; சதி திட்டமா...!


கேரளா: இலத்தூரில் தீப்பிடித்த அதே ரெயிலில் மீண்டும் தீ விபத்து; சதி திட்டமா...!
x
தினத்தந்தி 1 Jun 2023 7:05 AM GMT (Updated: 1 Jun 2023 11:16 AM GMT)

கேரள மாநிலம் இலத்தூரில் தீப்பிடித்த அதே ரெயிலில் மீண்டும் தீ விபத்து;சதி திட்டம் என தேசிய புலனாய்வு முகமை தகவல் கோரி உள்ளது.

கண்ணூர்

கண்ணூர் ரெயில் நிலையத்தில் மூன்றாவது நடைமேடை அருகே எட்டாவது யார்டில் ஆலப்புழா - கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைக்கபட்டு இருந்தது. நள்ளிரவில் இந்த ரெயிலின் பெட்டி ஒன்று எரிந்து சாம்பலானது.ரெயிலின் பின்பகுதியில் இருந்து மூன்றாவது பெட்டி எரிந்து சாம்பலானது

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கேரளா மாநிலம் இலத்தூர் ரெயில் தீ விபத்துக்கு பின், அதே ரெயிலில் தற்போது 2 வது முறையாக தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

அடையாளம் தெரியாத நபர் ரெயில் அருகே நடமாடும் வீடியோவும் ரெயில் ஏறும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

அதிகாலை ஒரு மணியளவில் தீ பற்றி பார்த்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். கழிவுகளை எரிப்பதாக பார்சல் ஊழியர்கள் கருதி இருந்தனர்.

தீயணைப்புப் படையினர் விரைவாக வந்து தீயை அணைத்ததால் மற்ற பெட்டிகளுக்கு தீ பரவவில்லை.

யாரோ வேண்டுமென்றே தீ வைத்திருக்கலாம் ரெயில் இன்ஜினிலிருந்து பிரிக்கப்பட்டிருப்பதால், ஷார்ட் சர்க்யூட் ஏற்பட வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

இதனிடையே கண்ணூர் ரெயில் தீவிபத்து குறித்து தேசிய புலனாய்வு முகமை தகவல் கோரி உள்ளது.இது திட்டமிட்ட சதி என சந்தேகிக்கத்தின் பேரில் மாநில ரெயில்வே காவல்துறையிடம் இருந்து தகவல் கேட்கப்பட்டுள்ளது. இலத்தூர் ரெயில் விபத்து வழக்கை தற்போது என்ஐஏ விசாரித்து வருகிறது.

இலத்தூர் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதலின் திட்டம் மற்றும் சதி குறித்து என்ஐஏ கொச்சி பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.


Next Story