காஞ்சீபுரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

ஆசிரியர் பணியிடங்கள்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் கீழ்க்கண்ட விவரப்படி ஆசிரியர்கள் பணியிடம் காலியாகவுள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் 12 பணியிடங்களும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் 4 பணியிடங்களும், பட்டதாரி ஆசிரியர் 2 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் 3 பணியிடங்களும் என்று மொத்தம் 21 பணியிடங்கள் காலியாக உள்ளன.

காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் காஞ்சீபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது.

கல்வித்தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கான ஊதியம் இடைநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.12,000/- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000/- மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.18,000/- மதிப்பூதியம் வழங்கப்படும்.

இதற்கான கல்வித் தகுதி பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் / தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர்களுக்கான கல்வி தகுதி விவரம்:

தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன், ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இல்லையெனில்) வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கல்வி தகுதி விவரம்:

முதுகலை ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள், பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்) மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்) அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

15-ந்தேதிக்குள்

மேற்கண்ட இந்த தற்காலிக பணி நியமனம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்./ இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள்முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள்முதல் மார்ச் 2024 மாதம் வரையிலும் தற்காலிகமாக நிரப்பப்படும். பணிநாடுநர்கள் ஆசிரியர் காலிப்பணியிடங்களை காஞ்சீபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆதிதிராவிடர்நல தனி தாசில்தார் அலுவலகங்களை அணுகி தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தை உரிய கல்வித்தகுதிசான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதி மாலை 5.45க்குள் ஒப்படைத்திட வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story