செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

ஆசிரியர் பணியிடங்கள்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைபள்ளி, மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் 35 பணியிடங்கள், பட்டதாரி ஆசிரியர் 10 பணியிடங்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் 7 பணியிடங்கள் என மொத்தம் 52 பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்ப பட உள்ளது.

காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

தொகுப்பூதியம்

மேற்கண்ட காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்ப படவுள்ளது.

மேற்கண்ட பணியிடங்களுக்கு இடைநிலை ஆசிரியருக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.10,000, மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.12,000 வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வித்தகுதி: ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வாலராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இல்லையெனில் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன், ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ளவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மதிப்பெண் சரி பார்ப்பில்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வித்தகுதி, முதுகலை ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று மதிப்பெண் சரிபார்ப்பில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது அந்த ஒன்றியத்திற்குள் வசிப்பவர்கள் அல்லது அந்த மாவட்டத்திற்கு எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இடைநிலை பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியடங்களை சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித்தகுதி பெற்ற நபர்களை மட்டுமே மேலே தெரிவிக்கப்பட்டள்ளவாறு பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக நிரப்பி கொள்ள வேண்டும்.

18-ந்தேதிக்குள்

பணி நாடுநர்கள் ஆசிரியர் காலிப்பணியடங்களை செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகங்களை அணுகி தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

காலிப்பணியடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணத்தினை உரிய கல்வித்தகுதி சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வருகிற 18-ந்தேதி மாலை.5.45 க்குள் ஒப்படைத்திட இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story