விவசாயியிடம் ஆவணங்களை பெற்று மோசடி செய்தவர் கைது


விவசாயியிடம் ஆவணங்களை பெற்று மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2023 7:30 PM GMT (Updated: 22 Jun 2023 7:21 AM GMT)

விவசாயியிடம் ஆவணங்களை பெற்று மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்

சேலம்

கோழிப்பண்ணை அமைத்து தருவதாக கூறி விவசாயியிடம் ஆவணங்களைபெற்று மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்விவசாயியிடம் ஆவணங்களைபெற்று மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். ஆள்மாறாட்டம் செய்து கடன் வாங்கியதும் அம்பலமாகி உள்ளது.

ரூ.14¾ லட்சம் கடன்

எடப்பாடியை அடுத்த குப்பனூர் வடக்கு பூலாம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 46). விவசாயியான இவர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனுவை அளித்திருந்தார். அதில், கடந்த 2014-ம் ஆண்டு ஈமு கோழிப்பண்ணை வைத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று எனது உறவினர் விஜயகுமார் என்பவர் தெரிவித்தார். இதற்காக எனது ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் முருகேசன், ஆறுமுகம், ராஜா ஆகியோரிடம் கொடுத்தேன்.

அதன்பிறகு ஈமுகோழி பண்ணை அமைப்பதில் பிரச்சினை உள்ளதாக தெரிவித்தார்கள். இதனால் எனது ஆவணங்களை திருப்பி கொடுக்குமாறு கூறியும் அவர்கள் தரவில்லை. ஆனால் விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தனியார் நிதி நிறுவனத்தில் எனது ஆவணங்களை கொடுத்து ரூ.14 லட்சத்து 76 ஆயிரம் கடன் பெற்று புதிதாக லாரியை வாங்கியுள்ளனர்.

முதியவர் கைது

அதன்பிறகு சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து வாகன கடனை செலுத்துமாறு கட்டாயப்படுத்தினர். எனவே, போலி ஆவணங்கள் தயாரித்து எனது பெயரில் கையெழுத்துபோட்டு மோசடி செய்த விஜயகுமார் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த மோசடி குறித்து மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரைச்செல்வி விசாரணை நடத்தி 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் விஜயகுமாரின் நண்பர் ராஜா (வயது 68) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். விவசாயி வெங்கடாசலத்தின் அசல் ஆவணங்களை எடுத்து ஆள்மாறாட்டம் செய்து நிதி நிறுவனத்தில் கடன் பெறவும், நம்பிக்கை மோசடி செய்ய உடந்தையாக இருந்ததால் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story