ஒரகடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறிப்பு; 2 வாலிபர்கள் கைது


ஒரகடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறிப்பு; 2 வாலிபர்கள் கைது
x

ஒரகடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்போனை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது பணியை முடித்துவிட்டு இரவு தனது வீட்டுக்கு செல்ல பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். மேலும் சேக்குப்பேட்டை கவரை தெரு அருகே வேலைக்கு சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த மாரியப்பன் என்பவரை கையால் தாக்கி அவரிடமிருந்தும் செல்போன் பறிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து செல்போன்களை பறிகொடுத்த இருவரும் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் காஞ்சீபுரம் பழைய ரெயில்வே ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உடனடியாக அவர்களை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இரவு நேரங்களில் செல்போன் பறிப்பில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையொட்டி காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவை சேர்ந்த புருஷோத் (19) திருக்காலிமேட்டை சேர்ந்த சூர்யா (23) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 2 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர்.


Next Story