ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு தண்ணீர் எடுப்பதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரத்து குறைந்தது


ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு தண்ணீர் எடுப்பதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரத்து குறைந்தது
x

கண்டேலுறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை இடையில் ஆந்திரா விவசாயிகள் சாகுபடிக்கு எடுத்து பயன்படுத்தி வருவதால், பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து குறைந்துள்ளது.

சென்னை

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் ஆகியவற்றை சேமித்து வைத்து, அவற்றை தேவைப்படும் போது புழல், செம்பரம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நிலையில், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி வீதம் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 2-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக் குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது.

மறுநாள் பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. பூண்டி ஏரிக்கு முதலில் வினாடிக்கு 20 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. அதன் பின்னர் நீர்வரத்து அதிகமாகியது. அதிகபட்சமாக வினாடிக்கு 310 கன அடி வீதம் தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக கிருஷ்ணா நீரை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. நேற்று காலை வினாடிக்கு 215 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 26.26 அடியாக பதிவாகியது. 1.027 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


Next Story