அதிமுக சட்டவிதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் - ஓபிஎஸ்


அதிமுக சட்டவிதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் - ஓபிஎஸ்
x

திரவுபதி முர்முவை சந்தித்து அதிமுக சார்பில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கூட்டணி கட்சித்தலைவர்களை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு கோரி வருகிறார்.அந்த வகையில், இன்று தமிழகம் வந்த திரவுபதி முர்மு, கூட்டணி கட்சித்தலைவர்களை சந்தித்தார்

அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினை காரணமாக ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இருவரும் தனித்தனியாக ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், 'அதிமுக சட்டவிதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர்' என்றார்.

கடந்த 23 ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதாகவும் தற்போது ஓ.பன்னீர் செல்வம் பொருளாளர் மட்டுமே என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறி வரும் நிலையில், ஓ பன்னீர் செல்வம் மேற்கண்ட பதிலை அளித்துள்ளார்.


Next Story