சென்னையில் கைதான கஞ்சா வியாபாரிகள் 1,423 பேரின் சொத்துகள் பறிமுதல் - 772 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது


சென்னையில் கைதான கஞ்சா வியாபாரிகள் 1,423 பேரின் சொத்துகள் பறிமுதல் - 772 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது
x

சென்னையில் கைது செய்யப்பட்ட 1,423 கஞ்சா வியாபாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து, அவர்களுக்கு சொந்தமான 772 வங்கி கணக்குகளை முடக்கவும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், சென்னை முழுவதும் கஞ்சா வியாபாரிகளை வேட்டையாடி கைது செய்து போலீசார் சிறையில் தள்ளி வருகிறார்கள். வாரந்தோறும் கைது நடவடிக்கை பற்றிய விவரங்கள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் 20 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்படும், கஞ்சா வியாபாரிகளின் சொத்துகள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் இன்னொரு பக்கம் அதிரடியாக நடக்கிறது. வங்கி கணக்குகளையும் முடக்கி வைக்கிறார்கள்.

அந்த வகையில் கடந்த ஒரு வருடத்தில் கைது செய்யப்பட்ட 1,423 கஞ்சா வியாபாரிகளின் சொத்துகள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றை முடக்கி மற்றும் பறிமுதல் செய்யவும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 772 வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 51 வங்கி கணக்குகள் இந்த முடக்கப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்றும், போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story