கொடைக்கானல் சுங்கச்சாவடியில் 'பாஸ்டேக்' முறையில் கட்டண வசூல்


கொடைக்கானல் சுங்கச்சாவடியில் பாஸ்டேக் முறையில் கட்டண வசூல்
x
தினத்தந்தி 8 Sep 2023 12:00 AM GMT (Updated: 8 Sep 2023 12:01 AM GMT)

கொடைக்கானலில் உள்ள சுங்கச்சாவடியில் வருகிற 15-ந்தேதி முதல் ‘பாஸ்டேக்’ முறையில் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது என்று நகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

திண்டுக்கல்

'பாஸ்டேக்' முறை

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதில் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் மூலம் வெள்ளிநீர்வீழ்ச்சி பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை வெளியூர் பகுதிகளில் இருந்து வருபவர்களும் தவறாக பயன்படுத்தி கட்டணம் செலுத்தாமல் செல்கின்றனர். இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதனை தடுப்பதற்காக நகராட்சி மூலம் கட்டண வசூல் செய்ய 'பாஸ்டேக்' முறை அமல்படுத்தப்பட உள்ளது. இவையில்லாமல் சுற்றுலா பயணிகள் பார்கோடு மற்றும் யு.பி.ஐ. பணபரிவர்த்தனை மூலமும் கட்டணம் செலுத்தலாம். இந்த கட்டணம் வசூல் செய்வதற்காக சுங்கச்சாவடியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் சத்தியநாதன் கூறியதாவது:-

15-ந்தேதி முதல்...

வருகிற 15-ந்தேதி முதல் பரிசோதனை அடிப்படையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களை அடையாளப்படுத்துவதற்கு டோக்கன் வழங்கப்படுகிறது. இதற்காக உள்ளூர் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனச் சான்று, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். அவர்களுக்கு விரைவில் டோக்கன் வழங்கப்படும். இதனை வாகனங்களில் பொருத்தி கொள்ள வேண்டும்.

சமீபத்தில் வார நாட்களில் நடத்திய கணக்கெடுப்பில் 15 நிமிடத்திற்குள் 60 சுற்றுலா வாகனங்கள் கொடைக்கானலுக்கு வந்தன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஏரியில் நகராட்சி படகு குழாம் சீரமைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் திறக்கப்பட உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கு எதிரே உள்ள சிறுவர் பூங்காவை அகற்றிவிட்டு அங்கு இடம் ஒதுக்குவதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

கண்ணாடி பாலம்

அதேபோல செண்பகனூர் பகுதியில் உள்ள நகராட்சி பூங்கா தனியார் பங்களிப்புடன் விரைவில் செயல்பட தொடங்கும். 18 சாலைகள் ரூ.2 கோடியே 29 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் இடத்தை நகராட்சியிடம் ஒப்படைப்பதற்கு பணிகள் நடந்து வருகிறது.

அங்கு வாகனம் நிற்கும் இடம் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கும் திட்டம் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு சொந்தமாக பொக்லைன் மற்றும் கழிவுகளை அகற்றும் லாரி ஆகியவை ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் வாங்கப்பட்டு உள்ளது. இவை விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story