நாகையில், பதுக்கி வைத்திருந்த ரூ.1½ கோடி கடல் அட்டைகள் பறிமுதல்


நாகையில், பதுக்கி வைத்திருந்த ரூ.1½ கோடி கடல் அட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 March 2023 6:45 PM GMT (Updated: 25 March 2023 6:46 PM GMT)

வெளிநாடுகளுக்கு கடத்தி செல்வதற்காக நாகையில், பதுக்கி வைத்திருந்த ரூ.1½ கோடி மதிப்பிலான கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

வெளிநாடுகளுக்கு கடத்தி செல்வதற்காக நாகையில், பதுக்கி வைத்திருந்த ரூ.1½ கோடி மதிப்பிலான கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

தீவிர கண்காணிப்பு

கடல்வாழ் உயிரினங்களில் அழிந்து வரும் கடல் அட்டை உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் அட்டைகள் கடத்தப்படுவதை தடுக்க நாகை மாவட்டத்தில் வனத்துறையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் உணவுக்காகவும், பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிப்பதற்காகவும் கடல் அட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தமிழக கடலோர பகுதியில் இருந்து சட்ட விரோதமாக கடல் அட்டைகள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரகசிய தகவல்

இந்த நிலையில் நாகையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்ல கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் நாகை திடீர் குப்பம் என்ற பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு குடோனில் கடல் அட்டைகளை பதப்படுத்திக்கொண்டு இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகையை சேர்ந்த சபரிநாதன்(வயது 40), செல்லூரை சேர்ந்த சுரேஷ்(47), அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்வம் (50) என்பதும், இவர்கள் 3 பேரும் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகளை பதப்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.

ரூ.1½ கோடி கடல் அட்டைகள் பறிமுதல்

இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார், ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 1000 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த கடல் அட்டைகளை நாகை வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிநாதன், சுரேஷ், செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story