திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் சாமி தரிசனம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 28 Jun 2023 6:45 PM GMT (Updated: 29 Jun 2023 11:10 AM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவிலில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் சாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று பகல் 2 மணியளவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அவரை கோவில் விருந்தினர் மாளிகை முன்பு திருச்செந்தூர் உதவி கலெக்டர் குணசந்திரன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், தாசில்தார் வாமணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் கோவில் சண்முக விலாச மண்டபத்தில் அவருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், தட்சனாமூர்த்தி, சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் வர உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்துக்குள்ளேயே நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளது. உலகத்திலேயே அதிக நெடுஞ்சாலை போடப்பட்ட 2-வது நாடாக இந்தியா உள்ளது. இதற்கு பிரதமருக்கு நாம் நன்றி உள்ளவர்களாக இருப்போம். இதற்கு முன்பு நமக்கு ஒரு தீர்வு என்றால் பிற நாடுகளை எதிர்பார்ப்போம். தற்போது மற்ற நாடுகள் நம்மிடம் தீர்வு காண்கிறது. ஜி.20 மாநாட்டில் பல்வேறு திட்டங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பலனடைவர். பிரதமர் வலிமையாக நடை போட்டு கொண்டிருக்கிறார். அவரை யாரும் அசைக்க முடியாது' என்று கூறினார்.

அவருடன் பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவர் சித்தராங்கதன், மகளிரணி மாநில பொது செயலாளர் நெல்லையம்மாள் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் இருந்தனர்.


Next Story