ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி - 2 சிறுவர்கள் கைது


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி -  2 சிறுவர்கள் கைது
x
தினத்தந்தி 19 Jun 2023 6:40 PM GMT (Updated: 20 Jun 2023 7:49 AM GMT)

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்

திருச்சி

திருச்சி கருமண்டபம் பகுதியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளை முயற்சி

திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரம் நகர் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே ஏ.டி.எம். மையமும் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்மநபர்கள் புகுந்து,. எந்திரத்தில் பணம் எடுக்கக்கூடிய பகுதியை கடப்பாரையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.நீண்டநேரம் முயற்சித்தும் பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை. இதற்கிடையே இரவுரோந்து போலீசார் அந்த பகுதியில் வந்ததை நோட்டமிட்ட அவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அங்கு வந்த ரோந்து போலீசார் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டதை கண்டு செசன்ஸ் கோர்ட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். வங்கி அதிகாரிகளுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

2 சிறுவர்கள் கைது

பின்னர் இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளர் சிந்தன் கொடுத்த புகாரின்பேரில், செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 14 வயதுடைய 2 சிறுவர்கள் ஏ.டி.எம்.மையத்துக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 சிறுவர்களையும் பிடித்த போலீசார் அவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.


Next Story