சசிகலா புஷ்பா வீட்டை தாக்கிய சம்பவம்: திமுக கவுன்சிலர்கள் 3 பேர் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு


சசிகலா புஷ்பா வீட்டை தாக்கிய சம்பவம்: திமுக கவுன்சிலர்கள் 3 பேர் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு
x

தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா வீடு மீது 15 பேர் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீட்டை தாக்கிய சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலர்கள் 3 பேர் உட்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வழக்கின் முழுவிவரம்:-

பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவராக இருப்பவர் சசிகலா புஷ்பா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி மேயராகவும், எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இவரது வீடு தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ளது. நேற்று முன்தினம் தூத்துக்குடியில் பா.ஜனதா கட்சி சார்பில் நடந்த விழாவில் சசிகலா புஷ்பா கலந்து கொண்டார். பின்னர் அவர் நாகர்கோவிலுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று மதியம் தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டுக்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 ஆட்டோக்களில் சுமார் 15 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. இந்த கும்பல் திடீரென வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர். இதில் வீட்டின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தன. ஜன்னல், பூந்தொட்டி மற்றும் முன்பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலிகளையும் மர்ம கும்பல் சூறையாடியது. பின்னர் அந்த கும்பம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டனர். தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. வீடு மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story