கூடுவாஞ்சேரி அருகே மூதாட்டி கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது


கூடுவாஞ்சேரி அருகே மூதாட்டி கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது
x

கூடுவாஞ்சேரி அருகே மூதாட்டி கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். கொடுத்த கடனை திருப்பி தருவதாக அழைத்து சென்று கொன்றது அம்பலம் ஆனது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி பெரியார் நகர் 13-வது தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). இவர் நேற்று முன்தினம் இரவு பக்கத்து தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று திரும்பும் போது அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் (52). லட்சுமியை வீட்டில் விடுவதாக கூறி அழைத்து சென்றார். அதன்பிறகு லட்சுமியை காணவில்லை என அவரது கணவர் வேடசாமி கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

மாயமான லட்சுமியை போலீசார் தேடி வந்த நிலையில், ஆப்பூர் அருகே உள்ள அரசு காப்பு காட்டில் லட்சுமி கழுத்தில் கத்தியால் குத்தியும், தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூறியதாவது:-

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு லட்சுமியிடம் ரூ.70 ஆயிரம் கடனாக வாங்கினேன். பணத்தை திருப்பி தர கால தாமதமானதால் தன்னுடைய வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டார். இதனால் தான் அவமானம் அடைந்த நிலையில் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய லட்சுமியிடம் தங்களுக்கு தர வேண்டிய பணத்தை வேறு ஒருவரிடம் இருந்து வாங்கி தருவதாக கூறி அழைத்துச்சென்றேன்.

ஆப்பூர் அருகே உள்ள காப்புக்காட்டில் கத்தியால் குத்தியும், தலையில் கட்டையால் அடித்தும் கொலை செய்தேன்.

இவ்வாறு இவர் கூறினார்.

இதையடுத்து போலீசார் ஆறுமுகத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story