வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் கைது - 12 பவுன் நகை பறிமுதல்


வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் கைது - 12 பவுன் நகை பறிமுதல்
x

திருநின்றவூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

ஆவடி அடுத்த திருநின்றவூர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). இவர் நேற்று முன்தினம் மாலை திருநின்றவூர் அடுத்த நத்தமேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஆறுமுகத்தை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 600 பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து ஆறுமுகம் திருநின்றவூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நத்தமேடு அருகே சந்தேகத்துக்கிடமாக சுற்றிக் கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்பொழுது இந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே போலீஸ் நிலைத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அடுத்த மேல்நெம்மிலி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சங்கரபாண்டியன் (வயது 48) என்பதும் ஆறுமுகத்திடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் திருநின்றவூர், பட்டாபிராம் பகுதிகளில் திறந்து வீடுகளுக்குள் நுழைந்து நகை திருட்டில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து 12 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story