போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு - சூளைமேட்டில் பரபரப்பு


போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு - சூளைமேட்டில் பரபரப்பு
x

சூளைமேடு போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர் திடீரென தீக்குளித்தார்.

சென்னை

சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர், சூளைமேடு, மேற்கு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்த நந்தகோபால் என்பவரின் லோடு ஆட்டோவில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நந்தகோபால், சுரேசுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சுரேஷ், நந்தகோபால் மீது புகார் மனு கொடுக்க நேற்று முன்தினம் இரவு சூளைமேடு போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

அப்போது அவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. சுரேஷ் திடீரென போலீஸ் நிலையம் முன்பு தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த போலீசார் உடனடியாக சுரேஷ் மீது துணியை போர்த்தி தீயை அணைத்தனர்.

பின்பு அவரை மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீக்காய பிரிவில் சேர்க்கப்பட்டு 50 சதவீத தீக்காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து சூளைமேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story