கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை கத்தியால் வெட்டிய ஆட்டோ டிரைவர்


கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை கத்தியால் வெட்டிய ஆட்டோ டிரைவர்
x

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை கத்தியால் வெட்டிய ஆட்டோ டிரைவர், தடுக்க வந்த மாமனார், மைத்துனரையும் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

சென்னை

சென்னை வியாசர்பாடி இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் பரதன் (வயது 29). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி தனலட்சுமி(29). இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு பரதன், தனது மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியுடன் தகராறு செய்தார். கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரமடைந்த பரதன், மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் மனைவி தனலட்சுமியை வெட்டினார். அப்போது தடுக்க வந்த மாமனார் ராஜசேகர் (65) மற்றும் மைத்துனர் அப்புன்ராஜ் (28) ஆகியோரையும் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து பரதன் தப்பி ஓடிவிட்டார்.

காயமடைந்த 3 ேபரும் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் பரத்தை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.


Next Story