திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

திருச்செந்தூர்,

ஆவணி திருவிழா முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கொடி மரத்திற்கு பால், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகை மங்கல பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

5-ம் நாளான வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு மேலக்கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

7-ம் நாளான 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் உருகுசட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் பிள்ளையன்கட்டளை மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு மாலையில் சுவாமி- அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

8-ம் நாளான 11-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். மதியம் 12 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story